ஜனநாயகத்தின் தூண்கள் :- ஊடகங்கள்

April 30, 2006 at 4:20 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 26 Comments

தேர்தல் வரும் பொழுதெல்லாம் நமக்கு இந்திய ஜனநாயகம் குறித்த விவாதங்களும், சந்தேகங்களும் வந்து விடும். தேர்தல் நேரம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட்ட வேண்டிய ஜனநாயக மரபுகளுக்கு தேர்தல் காலங்களில் மட்டுமே விளம்பரம் கிடைக்கிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் ஒரு புறம் இருக்க, நம்முடைய ஜனநாயகம் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கிறதா ? ஜனநாயகத்தின் நான்கு தூண்களான மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் போன்றவை சரியான வழியில் தான் இயங்கி கொண்டிருக்கிறதா ?

இது குறித்த அலசல் தான் இம் மாத திசைகள் இதழின் சிறப்பு பகுதியில் அலசப்படுகிறது. அதில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரையை இங்கே நான்கு பதிவுகளாக பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

முதல் பகுதியில் ஊடகங்கள் குறித்தான எனது பார்வை

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பிரபலமான ஒரு வணிக இதழில் இந்தியாவைக் குறித்த ஒரு கட்டுரையினை வாசிக்க நேர்ந்தது. இன்று இந்தியா பொருளாதார ரீதியில் பலம் பெறுவதற்கு காரணம் இந்தியாவின் ஜனநாயகம், இந்தியாவில் இருக்கின்ற தனி மனித சுதந்திரம் என்று ஒருவர் வருணித்து இருந்தார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் என்றாலும் இந்தியா விடுதலைப் பெற்ற பொழுது இந்தியா குறித்து இருந்த பிம்பம் வேறு வகையைச் சார்ந்தது. இந்தியா போன்ற பிந்தங்கிய ஏழ்மை நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று ஆங்கிலேயரும், மேற்கு உலகத்தினரும் நம்பினர். இந்த நம்பிக்கையை இந்தப் பிராந்தியத்தில் இருந்த பல நாடுகளும், காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளும் உறுதிப்படுத்தின. பல நாடுகள் சர்வாதிகாரிகளின் பிடியிலும் அரசியல் குழப்பத்திற்கும் உள்ளாகின. இந்தியாவிலும் இது போன்ற ஒரு நிலை இந்திரா காந்தியின் எமர்ஜன்சி காலங்களில் எழுந்தது. இந்தியாவின் ஜனநாயக முறைக்கு இந்திரா காந்தியும், அவரது மகன் சஞ்சய் காந்தியும் கடும் சவாலினை விடுத்தனர்.

“In the name of democracy” என்ற புத்தகத்தில் பிப்பன் சந்திரா இந்தியாவின் ஜனநாயக முறைக்கு சவால் விடுத்த எமர்ஜன்சி காலம் குறித்து எழுதும் பொழுது ” Not all popular mass movements lead to or strengthen democracy. Regimes which claimed to be defending democracy have themselves ended up as dictatorships” என்று கூறுகிறார். 1974க்கும் 1977க்கும் இடைப்பட்ட இந்திரா காந்தியின் அதிரடி எமர்ஜன்சி காலங்கள் தவிர இந்தியாவில் ஜனநாயகமும் தனி மனித சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாக பரவலான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. இந்தியாவின் ஜனநாயக முறை வளர்ச்சி அடைந்து வருவதற்கு இங்கு அமையும் அரசாங்கங்களும், தேர்தல் முறைகளும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் சாமானிய மக்களிடம் இது குறித்த அவநம்பிக்கை தான் அதிகமாக உள்ளது.

உலக நாடுகள் மத்தியில் இந்திய ஜனநாயகம் குறித்து இருக்கும் பரவலான நம்பிக்கை கூட இந்திய மக்களிடம் அதிகம் காணப்பட்டதில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம், அரசியல்வாதிகள், ஊடகங்கள் குறித்து பரவலான அவநம்பிக்கை பலரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களுடன் சில நேரங்களில் நடக்கும் அமெரிக்கா குறித்தான ஒப்பீடுகளில் கூட இந்தியா விடுதலைப் பெற்று 59ஆண்டுகளே ஆகிறது என்பதையும், இந்த 59 ஆண்டுகளில் ஜனநாயகம் என்ற விதையை விதைத்து, தவறான பொருளாதார கொள்கைகள், மதக் கலவரங்கள், சாதிக் கலவரங்களுக்கிடையே இந்தியா தட்டு தடுமாறி சரியான வழியிலேயே நடந்து வந்திருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

ஆனாலும் இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்று சொல்லப்படும் – அரசாங்க அதிகாரிகள், சட்டங்கள் இயற்றும் மக்கள் பிரதி நிதிகள், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறதா? அல்லது செல்லரித்துப் போய்க்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்வி பல நேரங்களில் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

ஊடகங்கள் குறித்து இந்தியா என்றில்லாமல் பல நாடுகளிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் ஊடகங்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை கவனிக்கும் முன்பு ஊடகங்களின் பணி என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்வார்கள். ஜனநாயகம் என்பதே மக்களுக்கானது தான். ஜனநாயகத்தின் தூண்கள் மக்களுக்கான, மக்களின் உரிமைகளை காப்பாற்றும் தூண்களாக, மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தும் நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாக கருதினர். ஜனநாயக முறையில் ஊடகங்களின் வீச்சு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் விடயங்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க ஊடகங்களால் முடியும். மக்களின் பிரச்சனைகளை பலர் அறியத் தர முடியும். மக்கள் பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை முன்வைக்க முடியும். மக்களிடைய பலப் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துக்களை எளிதாக பரப்ப முடியும். இதன் மூலம் மக்களின் அறிவையும், அவர்களின் மனித ஆற்றலையும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளுக்கு பயன்படுத்த தூண்ட முடியும். மக்களின் பிரச்சனைகளை பரவலாக இருக்கும் செய்தியாளர்கள் மூலம் ஆட்சியாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஊடகங்களுக்கு இருக்கும் இத்தகைய பலத்தால் தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக கூறினர். ஜனநாயக நடைமுறையில் ஊடகங்களின் சுதந்திரத்திற்கு அதிக மதிப்பும் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இந்த நெறிமுறைப் படி தான் ஊடகங்கள் நடந்து கொள்கிறதா ?

இந்தியா போன்ற ஏழ்மை நிறைந்த நாடுகளில் ஊடகங்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் அமைப்புகளாக ஊடகங்கள் இருக்க வேண்டும். ஆனால் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் என நிரம்பப் பெற்ற இந்தியாவில் ஊடகங்கள் சரியான வகையில் தங்கள் பங்களிப்பைச் செய்வதில்லை.

கடந்த வாரம் அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. அமெரிக்காவில் 911 என்ற காவல்துறையின் அவசரப் பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்தால் உடனே மருத்துவக் குழுவோ, காவல்துறையினரோ விரைந்து வந்து விடுவார்கள். பெரும்பாலான அவசர மருத்துவ உதவிக்கு 911ஐ தொடர்பு கொள்வது வாடிக்கையான நடைமுறை. ஆனால் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு 10வயது சிறுவன் தன் அம்மாவிற்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று கூறிய பொழுது சிறுவன் ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று 911ல் அலட்சியப்படுத்தி விட்டார்கள் (இவ்வாறு சிறுவர்கள் விளையாடுவதும் இங்கு நடப்பது உண்டு). அந்தச் சிறுவனின் தாய் இறந்து விட்டார். பெரும்பாலும் 911க்கு தொலைபேசியில் அழைத்தால் மிகவும் துரிதமாக வந்து விடுவார்கள். ஆனால் வெகுசில நேரங்களில் மட்டுமே இது போன்று நடந்து விடும். இது ஊடகங்களில் பெரிது படுத்தப்பட்டு அந்தச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதப்பட்டு 911ன் தவறு விமர்சிக்கப்பட்டது. இது போல நடந்தால் இங்கு ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதால் அரசாங்கமோ, அரசு அலுவலகங்களோ இது போன்ற விடயங்களில் தனி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. நம்மூர் அரசாங்க அலுவலகங்கள் போல இல்லாமல் இங்கு அரசாங்க அலுவலகங்களில் நான் கவனித்தவரையில் மிகுந்த பொறுப்புடனும், அக்கறையுடனும், “மரியாதையுடனும்” கவனிக்கிறார்கள். இதனுடைய பின்புலம் என்ன என்பது குறித்து கவனித்தால், இங்கு இந் நிலை ஏற்பட ஊடகங்களும் “ஒரு” காரணம் என்பதை மறுக்க முடியாது.

மக்களின் பிரச்சனைகளை ஊடகங்களில் ஒளிபரப்பும் பொழுது, அந்தப் பிரச்சனைகள் குறித்த விபரங்கள், தங்களுடைய உரிமைகள் போன்றவை குறித்த தகவல் மக்களிடம் பரப்பப்படுகிறது. அரசாங்கம் தங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை “demand” செய்து பெற்றே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் பொழுது இயல்பாக ஆட்சியாளர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வும், மக்கள் நலம் குறித்த அக்கறையும் ஏற்படுகிறது. ஆரம்ப காலங்களில் அமெரிக்காவில் ஊடகங்களின் வளர்ச்சி இதனை சரியாக செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் இந்தியாவில் இந் நிலை இன்னும் ஏற்படவில்லை. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கும் இந்தியாவில் திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சாதாரண மனிதனின் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. ஜெசிக்காலால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தலித்களின் பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. நம்முடைய சொந்த நாட்டில் நடக்கும் காஷ்மீர், அசாம் போன்ற பிரச்சனைகள் குறித்த உண்மை நிலைகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை. இங்கு பல ஊடகங்களுக்கும் ஒரு சார்பு நிலை இருக்கவேச் செய்கிறது. அந்த சார்பு நிலைகளைச் சார்ந்து தான் அந்த நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடுநிலை பத்திரிக்கைகள் என்று வருணிக்கப்படும் சில ஆங்கிலப் பத்திரிக்கை தொடங்கி மஞ்சள் பத்திரிக்கை வரை சார்பு நிலை, வியபார நோக்கு தவிர வேறு எதையும் இந் நிறுவனங்கள் யோசிப்பதில்லை. இன்று இந்திய ஊடகங்கள் வியபார நோக்கு என்ற ஒரு நிலையில் தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லத்தக்க அளவிலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவில் மிகவும் குறைவே. தமிழகத்தில் இருக்கின்ற ஆங்கில, தமிழ் வெகுஜன ஊடகங்களை நோக்கும் பொழுது சார்பு நிலை இல்லாத ஒரு நிறுவனத்தையும் பார்க்க முடியவில்லை என்பதே நம்முடைய ஊடகங்கள் எந் நிலையில் தற்பொழுது இருக்கின்றன என்பதற்குச் சிறந்த சான்று.

இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில், அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கும் மக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில், அரசாங்க இயந்திரங்கள் சரியான வகையில் தங்கள் பணிகளை செய்யாத நிலையில் ஊடகங்களின் பங்களிப்பு மக்கள் பிரச்சனைகளில் அதிகமாக இருக்க வேண்டும். ஊடகங்களின் போக்கில் வணிகநோக்கு இருப்பதில் தவறில்லை. அது நியாயமானதும் கூட. பல நாடுகளிலும் ஊடகங்கள் வணிகநோக்கிலும், தங்களுக்கான சார்பு நிலைகளுடனும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. அமெரிக்காவில் ஊடகங்களின் சார்பு நிலைகள் இராக் போரின் பொழுதும், தேர்தல்களின் பொழுதும் வெளிப்பட்டு இருக்கிறன.

ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் பிரச்சனைகளில் ஊடகங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது முக்கியம் என நான் கருதுகிறேன். வணிகநோக்கு, சார்பு நிலைகள் போன்றவற்றை விலக்காமலேயே ஊடகங்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

இதனை சில ஊடகங்கள் செய்ய முயற்சி எடுத்தன. ஆனால் இந்த முயற்சிகள் அதிக விளம்பர நோக்குடன் அரசாங்க அதிகாரிகள் ஊழல் பெறுவது, அரசியல்வாதிகள் ஊழல் பெறுவது போன்றவை சார்ந்து தான் இருந்தனவே தவிர சாமானிய மக்களின் பிரச்சனைகளைச் சார்ந்து இருந்ததில்லை. இந்திய ஊடகங்களில் CNN-IBN, NDTV, Thelkha போன்றவை செய்த, தொடர்ந்து செய்து வரும் சில முயற்சிகள் ஊடகங்கள் பயணிக்க வேண்டிய திசையை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இது ஒரு சிறு தொடக்கம் மட்டுமே. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

இந்தியா போன்ற பல மொழிவாரி மாநிலங்கள் உடைய நாட்டில் பிராந்தியப் பிரச்சனைகளை அந்த மாநிலங்களில் இருக்கின்ற ஊடகங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இந் நிலை பிராந்திய ஊடகங்களில் காணப்படவில்லை. பிராந்திய ஊடகங்கள் செய்திகள், பொழுதுபோக்கு, சினிமா, அரசியல் போன்றவற்றைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கின்றன. இது அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களாலும் சரி, இந் நிலையில் இருந்து பெரிய மாறுதல் இல்லை.

ஆசியாவில் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஊடகங்களுக்கான சுதந்திரம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கிறது. ஆனால் அதனுடைய செயல்பாட்டில் ஆரோக்கியம் காணப்படுவதில்லை. இந் நிலையில் ஊடகங்கள் சரியான பாதையில், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எழவேச் செய்கிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது எனக்கு பல காலமாக அவநம்பிக்கையே இருந்து வந்துள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்று கொண்டு இருக்கிறதே தவிர நம்பிக்கை பெரிய அளவில் ஏற்பட்டதேயில்லை.

ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டினை கொண்டு வருவது மூலம் இந்தியாவில் இருக்கின்ற தனிப்பட்ட குடும்ப ஊடகங்களின் ஆதிக்கத்தை மாற்ற முடியும். இதன் மூலம் ஊடகங்களின் தொழில்நுட்பம், செயல்பாடுகள் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர முடியும். கொடுக்கப்படும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இந்த ஊடகங்கள் இந்திய ஊடகங்கள் போல சார்பு இல்லாமல் செயல்படும் பொழுது நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட தன்மையினை பிரதிபலிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் பிரச்சனைகள் குறித்த வேறுபட்ட கருத்துக்களை கூறுவதிலோ, நாட்டின் முக்கிய பிரச்சனைகளாக காஷ்மீர் போன்றவற்றில் இருக்கின்ற உண்மை நிலையை மக்களிடம் கொண்டு வருவதிலோ எந்த தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் இந்த வெளிநாட்டு ஊடகங்கள் இந்திய மக்களின் பிரச்சனைகளை கொண்டு வரப்போவதில்லை.

இந்திய ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் இது கார்ப்ரேட் நிறுவனங்களாகவும், சில இடங்களில் அரசியல் கட்சிகளின் உபபிரிவுகளாகவுமே ஊடகங்கள் உள்ளன.

நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்படுகிறது

April 16, 2006 at 7:20 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 7 Comments

நர்மதா அணைப் பிரச்சனை அரசியலாக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இதன் மூலம் அரசியல் லாபம் அடைய உண்ணாவிரதம் இருக்கிறார். குஜராத் காங்கிரஸ் கட்சியினரும் நர்மதா அணை திட்டம் நிறுத்தப்பட கூடாது என்று வாதிட்டு கொண்டிருக்கின்றனர். பிரச்சனை அரசியலாக்கப்படுவதால் பிரதமர் மன்மோகன் சிங் அணை திட்டம் நிறுத்தப்படவில்லை என்கிறார்.

நர்மதா அணைப் பிரச்சனையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் சரி வர வழங்கப்படவில்லை என்பதை மூடி மறைக்க அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கின்றனர்.

இந்த நிவாரணம் குறித்த உண்மை நிலைகளை “இந்து” இன்று வெளியிட்டுள்ளது

மைய அரசால் உண்மை நிலவரங்களை கண்டறிய அனுப்பப்பட்ட மூன்று பேர் அடங்கிய அமைச்சரவை குழு, நிவாரணங்கள் சரியான வகையில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியிருக்கிறது. அவர்கள் சமர்பித்த அறிக்கை இன்னும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால் “இந்து” பத்திரிக்கைக்கு அந்த அறிக்கை கிடைத்துள்ளது. இதனை இன்று இந்து வெளியிட்டுள்ளது

Rehabilitation work shown only on paper: GoM report

Sardar Sarovar Project: GoM’s confidential report

நர்மதா அணைக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. பலர் தங்களின் ஆதரவினை நர்மதா அணையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தெரிவித்துள்ளனர். மும்பை திரைப்பட நடிகர் அமீர்கான் (சல்மான் கான் அல்ல) தன்னுடைய ஆதரவினை தெரிவித்துள்ளதால் அவர் திரைப்படங்களின் பேனர்கள், கட்-அவுட்கள் போன்றவை காங்கிரஸ் மற்றும் பாஜக அனுதாபிகளால் குஜராத் எங்கும் எரிக்கப்பட்டுள்ளது. அமீர்கான், இது குறித்து CNN-IBN மூலமாக ஒரு செய்தியினை விடுத்துள்ளார்.

அதன் சுட்டி : Aamir Khan dams political parties

அமீர் கான் அரசியலில் இறங்கப் போகிறார் அதனால் தான் இந்தப் பிரச்சனையில் நுழைந்துள்ளார். ஏன் 20 ஆண்டுகளாக அவர் இந்தப் பிரச்சனையில் நுழையவில்லை என்பன போன்ற கேள்விகள் பலரால் எழுப்பப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் அவர் இந்தப் பிரச்சனையில் எந்த நோக்கத்தில் நுழைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் அவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தப் பிரச்சனைக்கு இன்னும் ஆதரவினை திரட்ட அமீர்கான் போன்றவர்களால் உதவ முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றே அவர் வாதிட்டு கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சனையில் நிவாரணங்கள் பற்றிய உண்மையான நிலை இப்பொழுது வெளியாகியுள்ளது.

நர்மதா நதி அருகில் இருக்கும் நிலங்கள் நல்ல வளமான விளை நிலங்கள். அந்த விளை நிலங்களுக்கு பதிலாக எங்கோ ஒரு இடத்தில் விவசாயத்திற்கு ஏற்ற வகையில் இல்லாத இடங்களை அரசு வழங்கியுள்ளது. இது அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை. இது அவர்களின் வாழ்வியல் பிரச்சனை. அவர்கள் இருப்பதற்கு வீடு என்பது மட்டும் பிரச்சனையில்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கையை பறிக்கும் அரசு, அதற்கான சரியான நிவாரணங்களைச் செய்ய வேண்டும்.

காவிரிக் கரையில் இருக்கும் விளை நிலங்களுக்கு பதிலாக ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்களை கொடுத்தால் எப்படி இருக்கும் ? அந்த நிலை தான் நர்மதா அணைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இம் மாதிரியான பிரச்சனை குறித்து எனக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது. நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திற்காக தங்கள் விளை நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு சரியான மாற்று வாழ்வியல் தேவைகள் வழங்கப்படாமல் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பற்றி நான் அறிவேன்.

இன்னும் இந்தப் பிரச்சனையால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூட அரசுக்கு தெரியவில்லை என்று இந்து தெரிவிக்கிறது.
When asked as to how many SC/ST families were affected, the Government could not provide any information.

இந் நிலையில், மேதா பட்கர் தன்னுடைய உண்ணவிரதத்தின் 19வது நாளில் இருக்கிறார். அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர்

இந்தப் போராட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு – Friends of River Narmada

இன்னும் சிறிது காலத்தில் ஏற்கனவே முழ்கிய நிலையில் இருக்கும் பல கிராமங்கள், காடுகள், இயற்கையான பகுதிகள் முழுமையாக முழ்கி விடும்

இந்தப் பிரச்சனைப் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு

ரோசாவசந்த்தின் பதிவுகள் :
மேதா பட்கர்
நர்மதாவிற்கு ஆதரவாக

முத்துவின் பதிவுகள் :
நானூறு கோடியும் மேதா பட்கரும்
narmada issues -latest developments

தேர்தல் – சன் டிவி – தினகரன்

April 15, 2006 at 7:10 pm | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

இந்த தேர்தலில் சன் டிவி, குங்குமம், தினகரன் போன்ற மாறன் குடும்ப ஊடகங்களால் தங்களுடைய வியபார வாய்ப்புகளை பறி கொடுத்திருக்கிற குமுதம், தினமலர் போன்றவை திமுகவிற்கு எதிராக தொடுத்திருக்கும் ஊடக வன்முறை குறித்த எனது பார்வை

தேர்தல் – சன் டிவி – தினகரன்

April 15, 2006 at 5:55 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 52 Comments

இன்று தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது என்றால், மற்றொரு புறம் சன் டிவி-தினகரன் குழுமத்திற்கு எதிராக தமிழகத்தின் மொத்த ஊடகங்களும் கூட்டணி அமைத்தோ அமைக்காமலோ அணி திரண்டிருக்கின்றன. திமுக இந்த தேர்தலில் தோற்பது தங்களின் எதிர்கால “பிசினஸ்” வாய்ப்புகளுக்கு அவசியமாக இந்த ஊடகங்களுக்கு தெரிவதால் திமுகவிற்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை மிக தீவிரமாக்கியிருக்கின்றன. கருத்துக் கணிப்புகள், திரிக்கப்பட்டச் செய்திகள் என இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிராக பலமான அஸ்திரங்கள் இந்த ஊடகங்களால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஊடகங்களின் போக்கு “கன்றாவியாக” மாறியிருக்கிறது. இனி எந்த ஊடகங்களும் நாங்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்றோ, எங்களுக்கு தனிச் சலுகை வேண்டும் என்றோ கேட்க முடியாது. இந்த ஊடகங்களை அரசியல் கட்சிகளின் மற்றொரு பரிமாணமாகத் தான் நான் பார்க்கிறேன். அரசியல்வாதிகளை குறைச் சொல்லவோ, நக்கலடிக்கவோ இந்த ஊகங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

இன்று தமிழகத்தில் ஒரு பெரும் ஊடக சக்தியாக, தங்களுடைய சாதூரியத்தால் மாறன் அண்ட் கோ உருவாகி இருக்கின்றனர். தினமலர், தினத்தந்தி என பலப் பத்திரிக்கைகள் பல காலமாக முயன்று உருவாக்கி இருந்த வாசகர் எண்ணிக்கையை தங்களுடைய புரொபஷனல் பிசினஸ் உத்திகளால் சில மாதங்களிலேயே உருவாக்கி விட்டனர். இன்று தினகரன் 10லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக உருவாகி இருக்கிறது. குங்குமம் குறுகிய காலத்தில் குமுதம், விகடன் என பாரம்பரிய பத்திரிக்கைகளின் விற்பனையை கடந்து விட்டது. குங்குமம் கையாண்ட முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், தன்னுடைய பத்திரிக்கையின் விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற கலாநிதி மாறனின் வியபார நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அது ஒரு மகத்தான சாதனை என்றே நான் நினைக்கிறேன்.

நான் தினகரனை சிறிய வயதில் இருந்து பார்த்து வந்திருக்கிறேன். என்னுடைய அப்பா “தினகரன் – தினத்தந்தி – தினமணி” ஏஜெண்டாக இருந்தார். தினகரன் ஏஜென்சியை என்னுடைய பெயரில் தான் என்னுடைய அப்பா நடத்தி வந்தார். தினகரனை நடத்த நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். சுமாராக 25பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டதாக நினைக்கிறேன். தினத்தந்தி சில நூறு பிரதிகள் விற்கப்பட்டன. ராணி, ராணி முத்து போன்றவையும் அதிக அளவில் விற்கப்பட்டன. தினமணிக்கென்று ஒரு தனி வாசகர் வட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தினகரனை அதிகமாக விற்கச் சொல்லி அதிக Pressure கூட கொடுக்கப்பட்டது. ஆனால் வாங்குவதற்கு தான் யாரும் இல்லை. எனக்கு தெரிந்து இதனை வாங்கிக் கொண்டு இருந்தவர்கள் மிகத் தீவிரமான திமுக அனுதாபிகள் தான். அதுவும் சலூன் கடைகள், டீக் கடை, டைலர் கடைகள் போன்ற இடங்களில் தான் தினகரன் வாங்கப்பட்டது. அவர்கள் நிச்சயம் திமுக அனுதாபிகளாக இருப்பார்கள். வீடுகளில் தினகரன் அதிகம் வாங்கப்பட வில்லை. வைகோ சார்பாக தினகரன் மாறிய காலங்களில் (கே.பி.கந்தசாமி இருந்த பொழுது) பலர் பத்திரிக்கையை நிறுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் தினமலர் மிக Aggressiveக தன்னுடைய மார்க்கெட்டிங்கை செய்தது. தினத்தந்தி குழுமத்தின் பத்திரிக்கைளை நடத்துபவர்கள் தினமலரை நடத்தக் கூடாது என்பது எழுத்தில் இல்லாத உத்தரவு. தினத்தந்தியை நடத்துபவர்கள் அத்தனை பேரும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள். எனவே சாதி ரீதியாகவும் தினமலரை எதிரியாக பார்க்கும் நிலை தான் இருந்தது. ஆனால் தினமலர் எங்களை அணுகிய பொழுது நாங்கள் அதனை ஒப்புக் கொண்டோம். என்னுடைய அப்பா எதையும் பிசினஸ் நோக்குடன் அணுகும் குணம் உடையவர். மளிகைக் கடை நடத்துவதில் தொடங்கி நியுஸ் ஏஜென்சி வரை அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தினமலரை தினத்தந்திக்கு தெரியாமல் தான் நடந்த வேண்டும் என்னும் நிலை. நாங்கள் தினமலரை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று தினகரனுக்கு தெரிந்த நேரத்தில், தினகரனின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்று கூறி எங்களிடம் இருந்து ஏஜென்சியை மாற்றி விட்டார்கள். மற்றொரு ஏஜென்சியிடம் மாறிய பொழுதும் தினகரன் பெரிதாக விற்க வில்லை. அந்தளவுக்கு தான் தினகரனின் தரம் இருந்தது. திமுக அனுதாபிகள் தவிர யாரும் அந்தப் பத்திரிக்கையை வாங்க மாட்டார்கள். பெண்கள் ராணி, ராணிமுத்து போன்றவற்றை அதிகம் வாங்குவார்கள்.

தினமலரை நாங்கள் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தான் நடத்தினோம். ஆனாலும் அந்தப் பத்திரிக்கையை மார்க்கெட்டிங் செய்வதில் தொடங்கி, ஏஜெண்டுகளுக்கு சலுகைகள், ஊக்குவிப்பு செய்வது வரை தினமலர் மிகவும் புரொபஷனலாக இதனை எதிர்கொண்டது. தினமலரின் விற்பனையை உயர்த்துவதற்காக தினமலர் விற்பனையாளர்கள் எங்களுடன் எங்கள் பகுதியில் சந்தா உயர்த்துவதற்கும் முயற்சிகள், ஆலோசனைகள் வழங்கினர்கள். இதனால் தினமலரை சிறிது சிறிதாக தினதந்திக்கு நிகராக எங்களால் விற்பனையில் உயர்த்த முடிந்தது.

தினமலர், தினத்தந்தி இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே நிறைய வேறுபாடுகளை நாம் பார்க்க முடியும். தினத்தந்தியின் அலுவலகத்தில் இருந்து சில நேரங்களில் வரும் உயர்மட்ட பிரதிநிதிகள் வியபாரத்தை வளர்க்கும் எந்த நோக்கமும் இல்லாமல் ஏதோ அரசு Inspection ஏஜெண்ட் போல நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு உணவு போன்றவையும் நாம் வழங்க வேண்டும் (லஞ்சம்… கூட உண்டு). சில பரபரப்பான சமயங்களில் எங்களைக் கேட்காமலேயே நிறைய பிரதிகளை எங்களுக்கு தள்ளி விட்டு விடுவார்கள். இதனை விற்றாக வேண்டும் என உத்தரவு கூட வரும். பல நேரங்களில் இவ்வளவு பிரதிகளை விற்க முடியாது. விற்காத பிரதிகளை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். நாம் வற்புறுத்தினால் நஷ்டத்தில் உங்களுக்கு கொஞ்சம், எங்களுக்கு கொஞ்சம் என்று கூறுவார்கள். கொஞ்சம் கூட Business ethics என்ற ஒன்று அங்கு இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் தினமலரில் இவ்வாறு இருக்காது. அதனாலேயே தினமலர் ஏஜெண்ட்கள் மத்தியில் அபிமானம் பெற்றது. அதன் விற்பனையை உயர்த்துவதற்கும் முயற்சி எடுத்தனர். இதைத் தவிர தினமலர், உள்ளூர் செய்திகள், இலவச இணைப்புகள் போன்றவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த விற்பனையும் கணிசமாக உயர்ந்தது. தினத்தந்தி இதனை காப்பி அடித்ததே தவிர சுயமாக எதனையும் செய்ததில்லை. ஒரு நேரத்தில் சுமார் 500 பிரதிகளுக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த ராணி வார இதழ் சுமார் 100பிரதிகளுக்கும் குறைவாக வந்து விட்டது. அதனை மாற்ற எந்த முயற்சியையும் தினத்தந்தி நிர்வாகிகள் எடுக்க வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் தினமலர் மிக வேகமாக தன்னுடைய விற்பனையை அதிகரித்து கொண்டிருந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலரின் எண்ணிக்கை பிற நாட்களை விட அதிகமாக இருக்கும். அந் நாட்களில் வெளியாகும் இலவச இணைப்பான சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இதற்கு காரணம். தினத்தந்தியும் பிறகு இதனை பின்பற்ற தொடங்கியது.

சரியான மாற்று பத்திரிக்கைகள் இல்லாமையாலேயே தினத்தந்தி இன்னமும் தாக்கு பிடித்து கொண்டு இருந்தது என்று சொல்லலாம். அதுவும் தவிர தினமலர் தன்னுடைய செய்திகளில் சார்பு நிலையை அதிகம் பின்பற்றியதால் எல்லா வாசகர்களையும் அது சென்றடையவில்லை. தன்னுடைய சார்பு நிலைகளை ஒரம் கட்டி வைத்து விட்டு இதனை ஒரு இதழியலாக தினமலர் அணுகியிருந்தால் இன்னும் நிறைய வாசகர்களை சென்றடைந்திருக்க முடியும். தினத்தந்தியை விட விற்பனையை அதிகரித்திருக்க முடியும். அதுவும் தவிர ஆரம்ப காலங்களில் சந்தா பிடிப்பதில் ஏஜெண்களுடன் களத்தில் இறங்கி உத்துழைத்த தினமலர் பின் அதனையும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. தினமலரின் உத்திகள் மாறாத வரை அதன் எண்ணிக்கை இதற்கு மேலும் உயரும் என்று நான் நினைக்கவில்லை.

தினத்தந்தி வளர்ச்சியை அதிகரிக்க தினத்தந்தி குழுமத்தினர் சரியான உத்திகளை கொண்டிருக்கவில்லை. பாரம்பரியமாக இருக்கும் பத்திரிக்கை என்பதாலும், தினமலரை வாங்கக் கூடாது என்று நினைப்பவர்களும் தான் தொடர்ந்து தினத்தந்தியை வாங்கிக் கொண்டிருந்தனர். பத்திரிக்கைகளை விட தன்னுடைய சமூகம், அரசியல் போன்றவற்றில் சிவந்தி ஆதித்தன் கவனம் செலுத்த தொடங்கினார். “சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்” என்ற பெயரில் நெல்லையில் சிவந்தி ஆதித்தன் ஒரு அமைப்பை தொடங்கினார். நல்ல கூட்டமும் அந்த தொடக்க விழாவிற்கு வந்திருந்தது. அவர் நாடார் சமூக இயக்கத்தை தொடங்க இருக்கிறார் என்று நான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அவர் அதனைச் செய்ய வில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவருக்கு இருந்தது. அவர் நாடார் சமூகம் மத்தியில் மதிக்கப்படும் பிரமுகர். தன்னை அந்த அளவிலேயே நிறுத்திக் கொள்ள முனைந்தார் என நினைக்கிறேன். இப்பொழுது ஆதித்தனாரின் குடும்பத்தைச் சார்ந்த சரத்குமாரை திமுகவில் இருந்து பிரித்து இருப்பதும் சிவந்தி ஆதித்தன் தான் என்பது என் சந்தேகம். இதற்கு காரணம் தினகரனை மாறன் கைப்பற்றிய எரிச்சல் + தன்னுடைய தினத்தந்தி மார்க்கெட்டை தினகரன் கைப்பற்றும் என்ற அச்சம் + நாடார் சமூகம் சார்பில் தன் குடும்பத்தில் இருந்து ஒரு அரசியல் தலைவரை உருவாக்கும் அவரது எண்ணம். அதற்கு தன்னை விட சரத்குமார் சரியான நபர் என்று அவர் முடிவு செய்திருக்க கூடும். சரத்குமாரும் வழக்கம் போல “கலைஞர் குடும்பம்” மீது பழியைப் போட்டு திமுகவில் இருந்து வெளியேறி இருக்கிறார். வைகோ ஆரம்பித்து வைத்த குடும்பம் மீதான பழி போடும் பழக்கம் திமுகவில் இருந்து வெளியேற அனைவரும் பயன்படுத்தும் சாக்காக மாறியிருக்கிறது. கலைஞர் குடும்பத்தின் தயவால் தான் ராதிகா “ராடன்” என்ற நிறுவனத்தையே நடத்த முடிந்தது என்பது இவருக்கு மறந்து விட்டது போலும்

கே.பி.கந்தசாமிக்கு பிறகு தினகரனின் நிர்வாகம் அவரது மகன் குமரன் வசம் வந்தது. இவர் தினத்தந்தி குழுமத்தின் குடும்பத்தினர் தான். கே.பி.கந்தசாமி அதித்தனாரின் மருமகன். அடுத்த தலைமுறையில் கூட திருமணம் மூலம் இவர்களிடையே நெருங்கிய உறவு உள்ளது. இவர்கள் இந்தப் பத்திரிக்கையை நடத்த சரியான உத்தியை வகுக்காமல் மறுபடியும் ஒரு தவறைச் செய்தனர். வைகோ ஆதரவு நிலையில் இருந்து மறுபடியும் திமுக ஆதரவு நிலைக்கு பத்திரிக்கைச் சென்றது. இதனால் தங்களுடைய பழைய வாசகர் வட்டத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்தனர் என்பதை தவிர பெரிய நன்மை விளையவில்லை. கே.பி.கந்தசாமியின் மகன் குமரன் தினகரன் பத்திரிக்கையை மாற்றுவார் என்றே நான் நினைத்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியில் கலாநிதி மாறனிடம் தங்கள் பத்திரிக்கையை விற்று விட்டார்.

நிர்வாக அமைப்புடன், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தினசரியாக சுமார் 3லட்சம் பிரதிகளை விற்றுக் கொண்டிருந்த தினகரனை Acquisition மூலம் தனக்கு உரிமையாக்கிய கலாநிதி மாறன் தினகரனில் ஏற்படுத்திய மாற்றம் பிரமாண்டமானது. நான் இன்னும் இதன் அச்சுப் பிரதியை பார்க்க வில்லை. ஆனால் இதன் இ-பேப்பர் பார்க்கும் பொழுது தினகரனின் லேஅவுட் வேறு எந்த தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இல்லை என்று சொல்லலாம். இந்து வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆலோசகர்களை வரவழைத்து பத்திரிக்கையின் வடிவமைப்பை மாற்ற முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க, “ஆதி காலத்தில்” நாம் எப்படி பார்த்தோமோ அதே மாதிரி தான் எந்த மாற்றமும் இல்லாமல் தமிழ்ப் பத்திரிக்கைகளை பார்த்து வந்திருக்கிறோம். பெரிய வடிவமைப்பு மாற்றங்களை இந்தப் பத்திரிக்கைகள் செய்ததே இல்லை. ஆனால் தினகரன் அதிலும் முயற்சி எடுத்திருக்கிறது. வண்ண மயமான வடிவமைப்பு, செய்திகள்-படங்கள் போன்றவற்றை தொகுத்திருக்கும் முறை போன்றவை வழக்கமான தமிழ் பத்திரிக்கைகளில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவமைப்புடன் இருக்கிறது.

பத்திரிக்கைகளின் விலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மாத சந்தா தொகை படிப்படியாக உயர்ந்து செல்ல, விற்பனை குறைந்தே வந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அதனையெல்லாம் பத்திரிக்கைகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. காகிதம் விலை அதிகமானால் பத்திரிக்கையின் விலை அதிகமாக்கப்பட வேண்டும் என்ற நியதியை எந்தப் பத்திரிக்கையும் மாற்றியதில்லை. ஆனால் தினகரனின் அதிரடி விலைக் குறைப்பு பலரை பத்திரிக்கை வாங்க தூண்டியிருக்கிறது என நான் அறிகிறேன். பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனாலும் “ஓசி” பத்திரிக்கை தான் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தினகரனின் விலை 1ரூபாய் என்பது பலரையும் தினகரன் வாங்க தூண்டியிருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட தினகரனின் விற்பனை பெருக முக்கிய காரணம் – சன் டிவி.

சன் டிவி என்ற பவர்புல் ஆயுதத்தை வைத்துக் கொண்டு கலாநிதி மாறனால் Consumer சார்ந்த எந்தத் துறையிலும் எளிதாக இறங்கி வெற்றி பெற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதனுடைய வீச்சு அவ்வளவு பலமாக இருக்கிறது. பத்திரிக்கையின் சர்குலேஷனை உயர்த்த நாங்கள் எடுத்த Traditional வகையான முயற்சிகளை நோக்கும் பொழுது, தினகரனின் 10லட்சம் பிரதிகள் ஒரு இமாலய சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில மாதங்களில் சுமார் 7லட்சம் பிரதிகள் அதிகமாகி இருக்கிறது. இதற்கு சன் டிவி, கே டிவி மற்றும் சூரியன் எப்.எம். மூலம் தினகரனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட விளம்பரமும் ஒரு காரணம. இந்த வசதி பிற தினசரிகளுக்கு இல்லை. சந்தா உயர்த்த வேண்டுமானால் ஏஜெண்ட்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது தான் இவர்களின் உத்தியாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அதனை தினகரன் மாற்றி எழுதியிருக்கிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளாமையும், தினகரன் அதனை மாற்றியதும் தான் தினகரனின் வெற்றிக்கும் பிற தினசரிகளின் தேக்க நிலைக்கும் முக்கிய காரணம்.

தினகரன் புதிய வாசகர்களை கவர்ந்திருப்பது மட்டுமல்லாமல் பிற பத்திரிக்கைகளின் விற்பனையும் கண்டிப்பாக குறைத்திருக்கும். தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தங்கள் பத்திரிக்கையின் விலையை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய லாபம் குறையும் பொழுது, வியபாரத்தில் திடீர் சவால்கள் எழும் பொழுது அதற்கு காரணமானவர்களை நோக்கி கோபம் திரும்புவது இயற்கை தான்.

தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு நிலையுடன் இந்த புதிய எரிச்சலும் சேர்ந்து கொள்ள, இன்று தினமலர் மிக மோசமான ஊடக வன்முறையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தொடுத்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கு எதிராக நாடார் சமூகத்தை திருப்பும் முயற்சியை சிவந்தி ஆதித்தன் மேற்கொண்டிருக்கிறார். சரத்குமாரை திமுகவில் இருந்து விலக்குவது அதன் முதல் கட்டம். இது நாடார் சமூக ஓட்டுக்களை அதிமுகவிற்கு ஆதரவாக கொண்டு வரும் என்பது அவரது கணக்கு. ஒரு காலத்தில் தினமலரை கண்டாலே எரிச்சல் அடையும் தினத்தந்தி குழுமம் கலாநிதி மாறனை எதிர்க்க கூட்டணி அமைக்காமலேயே தினமலருடன் சேர்ந்து கொண்டுள்ளது.

பத்திரிக்கையின் பிரதிகளை விற்க இதற்கு மேல் முடியாது என தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் முடிவு செய்திருந்தன. ஆனால் தமிழகத்தில் இருக்கும் வாய்ப்புகளை சரியாக கண்டு கொண்ட கலாநிதி மாறனின் வியபார உத்திகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அது போலவே தான் குங்குமத்தின் வளர்ச்சியும். குமுதம், ஆனந்த விகடன் என தமிழகத்தின் பாரம்பரிய குடும்ப பத்திரிக்கைகளின் ஆதிக்கத்தை தன்னுடைய “புதுசு கண்ணா புதுசு” விளம்பரம் மூலமே கலாநிதி மாறன் மாற்றிக் காட்டினார். இன்று குங்குமம் தமிழகத்தில் சுமார் 55லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நம்பர் 1, இந்தியாவிலேயே நம்பர் 2 என்பது குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை.

இதற்கு காரணம் தினகரன், குங்குமம் போன்றவற்றின் தரம் என்பதை விட சன் டிவி விளம்பரங்கள் தான் என்பது மாறனுக்கு கடும் எதிர்ப்பை அவரின் போட்டி பத்திரிக்கை குழுமங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இப்பொழுது சன் டிவி மீதும், திமுக மீதும் திரும்பி இருக்கிறது. குடும்ப அரசியல் மறுபடியும் பிரச்சனையாக்கப்பட்டிருக்கிறது. ஊடக நியதிகளை எல்லாம் கடந்து திரிக்கப்பட்ட செய்திகள், கருத்துக் கணிப்புகள், பொது மக்களை குழப்புதல் போன்றவற்றை இந்தப் பத்திரிக்கைகள் செய்து கொண்டு இருக்கின்றன. இது வரை திமுகவிற்கு பலமாக இருந்த சன் டிவி இப்பொழுது இந்த தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் தொடுக்க நிறையவே சிரமப்படுகிறது.

சன் டிவியின் செய்திகள் திமுக சார்பாகத் தான் இருக்கும் என்பதால் சன் டிவி சொல்வதை நம்பப் போவதில்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிற ஊடகங்கள் எதிர்த்தாக்குதலை தொடுத்து இருக்கின்றன. செயற்கையாக அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் எழுப்பி கொண்டிருக்கின்றன. நான் அதிமுக தேர்தலில் தோற்று விடும் என்று சொல்லவில்லை. போட்டி கடுமையாகவே இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக கருத்துக் கணிப்பை அணுகிய IBN-HINDU கூட குழப்பத்துடன் தான் தங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் எல்லா மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை எப்படி எழுப்புகின்றன ?

விஜயகாந்த்திற்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஆதரவையும் இங்கு கவனிக்க வேண்டும். தினமலர் ரஜினிகாந்த்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்றால் அதில் ஒரு “லாஜிக்” இருக்கிறது. ரஜினிகாந்த் கடவுள் பக்தர். இயல்பாக பிஜேபி ஆதரவு நிலை உள்ளவர். தினமலரின் “கொள்கைகளுக்கு” ஏற்ற வகையில் இருப்பவர் என்பதால் இவருக்கு கடந்த காலத்தில் தினமலர் கொடுத்த ஆதரவினை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் விஜயகாந்த்தை இவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் ?

விஜயகாந்த் கொள்கைகளிலோ, பிற கட்சிகளைக் காட்டிலும் தன்னிடம் ஒரு தனித் தன்மை இருப்பதாகவோ இது வரையில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. பிற கட்சிகள் செய்யும் அனைத்து ஸ்டண்களையும் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே செய்து இருக்கிறார். என்றாலும் “தமில்”, “தமில்” என்று முழுங்குபவர். அரசியலில் அவர் நுழைவது என்ற முடிவினை எடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே “விடுதலைப் புலிகள்” மற்றும் தமிழீழத்தின் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். ஈழத்தில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் நடிகர்களில் இவர் தான் நிதி வழங்குதல், நிதி திரட்டுதல் போன்றவற்றைச் செய்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது இவர் கொண்ட அபிமானத்தால் தான் தன்னுடைய படத்திற்கு “கேப்டன் பிரபாகரன்” என்று பெயர் வைத்தார் என்றும் சொல்லப்பட்டதுண்டு. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகள் கடுமையாக தாக்கப்பட்டன. இவர் வீடு, கார், அந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் போன்றவையெல்லாம் தாக்கப்பட்டன என அப்பொழுது கேள்விப் பட்டிருக்கின்றேன்.

அப்படி பட்டவர் மீது தினமலருக்கோ, “கேப்டன்” என்று இப்பொழுது புகழ்ந்து கொண்டிருக்கும் “சிலருக்கோ” எப்படி திடீர் அபிமானம் ஏற்பட்டது என்பது எனக்கு வியப்பாகத் தான் இருக்கிறது. விஜயகாந்த், திமுக-பாமக ஓட்டு வங்கிக்கு வேட்டு வைப்பார் என இவை நம்புகின்றன. அப்படி வேட்டு வைத்தால் அதிமுகவிற்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தினமலர், குமுதம் போன்ற ஊடகங்கள் விஜயகாந்த்தை தூக்கிப் பிடிக்கின்றன. வைகோ திமுகவை பிளவு படுத்திய காலங்களில் இவ்வாறு தான் தினமலர் வைகோவிற்கு நிறைய விளம்பரம் கொடுத்தது. அதன் பிறகு திமுக பிளவு பட்டப் பிறகு வைகோ தினமலரில் இருந்து காணாமல் போய் விட்டார். விஜயகாந்த்திற்கும் தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை தான் ஏற்படும் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் டாப் 10 வார இதழ்களில் குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் போன்றவை வந்து விடுகின்றன. ஆனால் எண்ணிக்கையில் தெரியும் ஆரோக்கியம், இந்தப் பத்திரிக்கைகள் கொடுக்கும் செய்திகளில் இல்லை. இன்று உண்மையான, நடுநிலையான செய்திகளுக்கு தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையும் இல்லை என்பது தான் உண்மையான நிலை. ஆனால் இந்தியாவின் ஊடக உத்திகளை தன்னுடைய விற்பனை உத்திகளால் சன் குழுமம் மாற்றி எழுதி இருக்கிறது. சன் டிவி மீதான பொறாமையும் அதிகரித்து இருக்கிறது.

அரசியல் செல்வாக்கு மூலமே சன் டிவி வளர்ந்தது என்று கூறுவதும் சரியானது அல்ல. சன் டிவி தொடங்கப்பட்ட பொழுது அரசியல் செல்வாக்கு காரணமாக “ஜெஜெ டிவி” என்று ஒன்று தொடங்கப்பட்டதே ஞாபகமிருக்கிறதா ? அரசியல் செல்வாக்கு சரிந்தவுடன் அந்த தொலைக்காட்சியும் காணாமல் போய் பின் தவறுகளை திருத்திக் கொண்டு “ஜெயா டிவியாக” வந்தது. ஆனால் அது போன்ற எதுவும் சன் டிவிக்கு ஏற்பட்டதில்லை. சன் டிவி செய்யும் அனைத்தனையும் யாரும் சரி என்று சொல்ல முடியாது. சன் டிவி குறித்து என்னுடைய பலப் பதிவுகளில் நான் விமர்சித்து இருக்கிறேன். அதே நேரத்தில் சன் டிவி எழுப்பிய இருக்கிற ஊடக சாம்ராஜ்யத்தை பொறாமை மூலமும், திமுகவை இந்த தேர்தலில் தோற்க்கடிப்பதன் மூலமும் முடிவிற்கு கொண்டு வரலாம் என்று நினைத்து அதற்காக பொய்யான ஒரு தோற்றத்தை பிற ஊடகங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஊடகங்கள் “கன்றாவியாக” மாறி விட்டதன் உச்சகட்டம் என்றே நான் கருதுகிறேன்.

கருத்துக் கணிப்புகள்

April 13, 2006 at 10:48 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 17 Comments

தமிழகத்தில் ஊடகங்கள் பல கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க ஓரளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பான CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு, இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிற கருத்துக் கணிப்புகளில் குறிப்பாக குமுதத்தில் ஏதோ போனால் போகட்டும் என்று மாவட்டத்திற்கு சில தொகுதிகள் மட்டும் திமுகவிற்கு பெரிய மனதுடன் வழங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிற்கு குமுதம் வாரி வழங்கியுள்ளது, அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த்திற்கு 10%-20% வாக்குகள் என ஓரே ஆச்சரியம் தான்

இந்தக் கணிப்புகள் யாருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலானோர் இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்றாலும் கொஞ்சம் குழம்பித் தான் போயினர். அத்தகைய குழப்பத்தை விளைவிக்கத் தான் இந்த கருத்துக்கணிப்புகள் திணிக்கப்படுகின்றன என்று நினைக்கத் தோன்றுகிறது.

CNN-IBN மிகுந்த உஷாருடன் தன்னுடைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளின் தோல்விகளால் எவ்வளவு தொகுதிகளை யார் பிடிப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக 46% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும், திமுக 44% வாக்குகளை கைப்பற்ற கூடும் எனவும் தெரிவிக்கிறது. ஆனாலும் இது சரியான கணிப்பாக இருக்காது எனவும் அதிமுகவின் 2%கூடுதல் வாக்குகள் என்பது கருத்துக்கணிப்புகளில் இருக்கும் standard errorல் கழிந்து போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறியிருக்கிறது.

பெரும்பாலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கருத்துக்கணிப்புகளை விஞ்ஞானப் பூர்வமாக அணுகுவதாக கூறப்படும் முறைகளில் பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதில்லை. கடந்த காலங்களில் இவை சரியாக முடிவுகளை கணிக்க முடியவில்லை என்பது தவிர, தங்கள் தவறுகளை அடுத்து வரும் கருத்துக் கணிப்புகளில் திருத்திக் கொண்டதாகவும் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக் கணிப்புகள் எந்த வகையில் தோல்வி அடைந்தன என்பதையும் இவர்கள் வெளியிட்டதில்லை. தமிழகத்தில் இவர்களுடைய கருத்துக் கணிப்புகள் எப்பொழுதுமே சரியாக இருந்ததில்லை.

இந்தியா மற்றும் தமிழகத்தில் பல பிரிவு மக்கள், பல வித கட்சிகள், சாதியைச் சார்ந்த பல விதமான ஓட்டுப் பிளவுகள் இருக்கும் சூழலில் இந்தக் கருத்துக்கணிப்புகளை சரியாக அணுகும் முறை இன்னும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். IBN-HINDU கருத்து கணிப்பில் கூட Random Sampling முறையில் 4,781 பேரிடம் 232 இடங்களில் இருந்து 58 தொகுதிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த வகையில் இந்த சாம்ப்பிள் கொண்டு வரப்பட்டது என்பதை பொறுத்தே இதன் சரியான கணிப்பு இருக்க முடியும்.

பொதுவாக செய்யப்படும் நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என்பதைக் கடந்து எந்தச் சாதி, எந்தக் கட்சியை சார்ந்தவர், எந்த ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர், இவை எதனையும் சாராத பொதுவான வாக்காளரா, கட்சியை சாராதவராக இருந்தாலும் இந்தக் கட்சிகளின் மேல் அபிமானம் உள்ளவரா என்பன போன்றவையெல்லாம் கருத்துக் கணிப்பிற்கு முக்கியம் என்று நினைக்கிறேன். ஆனால் இதனை எல்லாம் கொண்டு செய்வது அவ்வளவு எளிதல்ல. கருத்துக் கணிப்பில் அவர்கள் உண்மையை கூறுகிறார்களா என்பதும் கணிக்க முடியாதவை. அந்த வகையில் பார்க்கும் பொழுதும கருத்துக் கணிப்பின் Error 1% இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அதிகமாகவே இருக்கும்.

அது போல Random Samplingக்கிறகு கொண்டு வரப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது. எனவே இந்தக் கருத்து கணிப்பு முறை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்றாலும் பிற கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் இந்தக் கருத்து கணிப்பு பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞான முறைப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் நினைத்தது போலவே கடும்போட்டி இருப்பதாகவே கருத்துக் கணிப்பு பிரதிபலித்து இருக்கிறது.

ஆனால் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்களே தேர்தலின் வெற்றி தோல்விகளில் முக்கிய காரணிகளாக இருக்கப் போகிறது. உதாரணமாக தேர்தலின் வெற்றி தோல்வி பெரும்பாலும் கடைசி சில 5 தினங்களில் ஏற்படுவதாகத் தான் நான் நினைக்கிறேன். தலைவர்களின் பிரச்சாரம் ஏற்படுத்தும் தாக்கம் போன்றவையெல்லாம் தணிந்து ஒரு முடிவை நோக்கி மக்கள் செல்வது இந்த தினங்களில் தான். அது போல தேர்தல் இறுதி நேரத்தில் பல தொகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் மாறி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் முடிவெடுக்காத வாக்காளர்கள் 30% அளவிற்கு இருக்கின்றனர் என கருத்துக் கணிப்பு கூறுகிறது. வாக்காளர்களின் மனநிலையும் தேர்தலின் இறுதி நேரத்தில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Secondly, the survey revealed that about 30 per cent of the respondents were either unwilling to disclose their voting preferences or were unsure who they would eventually vote for. About 13 per cent did not reveal a preference; six per cent gave a preference but were unsure whether it would remain the same until election day; and another 11 per cent were more or less sure but not absolutely confident of the way they were going to vote a month from the

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் “இந்து” தெரிவித்துள்ளது

Thirdly, the advantage of two percentage points for the AIADMK alliance may not result in an advantage in terms of seats. The votes of the DMK and the PMK are concentrated in areas of strength and, as a result, the seat yield from these areas of strength could compensate for a modest disadvantage in terms of share of-the-overall-vote disadvantage. So, despite a difference in vote share, it could be a virtual tie in terms of seats.

பாமகவின் concentrated ஓட்டுவங்கி குறித்து என்னுடைய பதிவில் ஒரு முறை விவாதம் நடந்தது. என்னுடைய வாதத்தை இந்த கருத்துக் கணிப்பு உறுதி செய்வது போல உள்ளது. இந்த தேர்தலில் வடமாவட்டம் திமுக கூட்டணி கைகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு “Advantage” நிச்சயம் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை IBN-HINDU மிகுந்த எச்சரிக்கையுடனே வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்று கூறி எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய Credibility பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளது. கடந்த கால கருத்துக்கணிப்பு தோல்விகள் அவர்களை இந்த முடிவினை எடுக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலின் பொழுது ராஜ்தீப் NDTVயில் வெளிப்படையாகவே இதனை கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழ்நாடு எங்கள் கருத்துக்கணிப்பிற்கு மாறாக வாக்களித்தால் அந்தப் பக்கம் போகவே போவதில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

போட்டி மிகக் கடுமையாக இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்தக் கருத்து கணிப்பில், தொங்கு சட்டசபை அமையாது என்றும் கூறுகிறார்கள். மிகுந்த குழப்பத்துடனே கருத்துக் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்

தமிழக மக்கள் அவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார்களா என்ன ?

கருத்துக் கணிப்புகள்

April 13, 2006 at 7:04 pm | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

CNN-IBN-HINDU கருத்துக் கணிப்பு குறித்த எனது அலசல்

அத்வானி : ஜின்னா : நேரு

April 13, 2006 at 9:57 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

இந்தியாவின் இரண்டாவது “இரும்பு மனிதர்” என்று ஒரு காலத்தில் பாரதீய ஜனதா கட்சியினரால் அழைக்கப்பட்ட அத்வானி இன்று மிகக் “குழப்பமான மனிதர்” ஆகியிருக்கிறார். கட்டுக்கோப்பான கட்சி என்றும், நேர்மையான கட்சி என்றும் “சில அரசியல் விமர்சகர்களால்” சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று கோஷ்டி பூசல்கள், லஞ்ச விவகாரங்கள், தலைவர்களின் தலைமை ஆசை என திண்டாடிக் கொண்டிருக்கிறது. கட்சியின் ஒரு தலைவர் மீது மற்றொரு தலைவர் பாலியல் காசெட்டுகளை வெளியிட்டு காலை வாரி விட முயலுவது என “அதி நாகரிகமான” கட்சியாக பாஜக மாறி விட்டது.

கடந்த காலங்களில் “நாக்பூரில்” இருந்து திரைமறைவில் இயக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று வெளிப்படையாக நாக்பூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராகக் கூடியவர் என்று வருணிக்கப்பட்ட அத்வானி போன்ற “பவர்புல்” தலைவர்களே இன்று நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையால் அரசியலில் இருந்து தூரத்தப்படும் நிலையில் இருக்கிறார்கள்.


கட்சியில் சரிந்து போய் விட்ட தன் செல்வாக்கினை சரி செய்ய அத்வானி மற்றொரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். அவருடைய முதல் ரதயாத்திரை அனைவராலும் ஆதரிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சி முதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் குழுக்கள் வரை அனைவரும் அத்வானியை தங்கள் கொள்கைகளை காப்பாற்ற வந்த “பிதாமகனாக” நினைத்தனர். அந்த ரதயாத்திரை தான் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகியது.

ஆனால் இம் முறை அத்வானி மேற்கொள்ளும் ரதயாத்திரைக்கு அவரது சொந்த கட்சியினரிடம் கூட ஆதரவு இல்லை. அவராக வலியச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் ஆதரவு கேட்ட பொழுதும் அவர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் “சலுகை” கொடுக்கிறது, “அமெரிக்காவிடம் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை அடகு வைத்து விட்டது” போன்ற உப்புசப்பில்லாத விவகாரங்களை ரதயாத்திரைக்கான காரணங்கள் என அத்வானி கூறிக்கொண்டிருப்பது அவருடைய பரிதாபமான நிலையையே காட்டுகிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர் இர்பான் பத்தான் முஸ்லிம், ஆனாலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார் என்று ரதயாத்திரையில் உளறிக்கொண்டிருக்கிறார். இர்பான் பத்தானை யாரும் இங்கு முஸ்லிம் என்று பார்ப்பதில்லை. அவரை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, ஒரு இந்தியராகத் தான் பார்க்கிறார்கள். அவரை முஸ்லிம் என்று அழைத்து, அவரை ஒரு உதாரணமாக காட்டி பிற முஸ்லிம்கள் அப்படி இல்லை என்று கூறும் முயற்சியாகவே இது தெரிகிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது பலன் இருக்க போவதில்லை.

ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் “மாஸ்க்” தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தெளிவு படுத்தின. அத்வானி கட்சியின் தலைமையையும், கட்சி மீதான தனது கட்டுப்பாட்டையும் இழந்து விட்டார். அடுத்து பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் கூட நரேந்திர மோடி பிரதமராகக் கூடிய அளவிற்கு கூட அத்வானிக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

அத்வானியின் இந்த நிலைக்கு அவர் ஜின்னாவை குறித்து பாக்கிஸ்தானில் பேசியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எந்த அத்வானி தங்களின் “கொள்கையை” கட்டிக் காப்பாற்றுவார் என ஆர்.எஸ்.எஸ் நினைத்ததோ, அதே அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் “பாக்கிஸ்தான்” என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை தங்களின் “கதாநாயகன் அத்வானி” புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, எங்கே நாக்பூர் தலைமை “குஜராத் தாதா” நரேந்திர மோடியை பாஜக தலைவராக்கி விடுமோ என்று அனைவரும் அஞ்சி இருக்க, ஏதோ இந்தியாவின் மிஞ்சி இருக்கிற மரியாதை பிழைத்து போகட்டும் என்று நினைத்து ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கி, அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் எடுத்தது. இன்று அத்வானி மறுபடியும் ஒரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். இதன் மூலம் தன்னுடைய செல்வாக்கினை நிலைநிறுத்த முனைகிறார். ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறம் இருந்து ரதயாத்திரை தொடங்குகிறார். அத்வானியின் ரதயாத்திரையை வாஜ்பாய் விமர்சித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவில் அத்வானியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லை என்பது அவரது ரதயாத்திரை மற்றொரு முறை நிருபித்து இருக்கிறது.

ஒரு மத அடிப்படைவாதியாக தன்னை காட்டிக் கொண்ட அத்வானி, ஏன் ஜின்னாவை புகழ்துரைக்கும் தவறைச் செய்தார் ? இந்திய அரசியலில் “Pseduo secularist” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி அதற்கு காங்கிரசை உதாரணமாக கொடுத்த அத்வானி தன்னுடைய இயக்கத்தின் ஜென்ம விரோதியான ஜின்னாவை எப்படி Secularist என்று வர்ணிக்க துடித்தார் ?

அத்வானி என்ன தான் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக இருந்தாலும், ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சியில் பிரதமராக தனக்குபலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். அது போல ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தே “ஜின்னா Securalist” என்ற அஸ்திரத்தை பிரயோகித்துப் பார்த்தார். இதன் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. அத்வானியின் இந்த நோக்கமும், பாரதீய ஜனதா கட்சியை ஒரு மத அடிப்படைவாத இயக்கத்தின் பிடியில் இருந்து விலக்குவதும் மிகச் சரியான நடவடிக்கையாகவே எனக்கு தெரிகிறது. ஆனால் மதவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அதனை அவரால் விலக்க முடியவில்லை. மறுபடியும் சிறுபான்மையினருக்கு எதிரான அஸ்திரத்தை எடுத்து பழைய நிலைக்கு மறுபடியும் நுழைய முனைகிறார்.

ஜின்னா மதரீதியாக இந்தியாவை பிளந்து பாக்கிஸ்தானை உருவாக்கினார். எனவே அவர் மதவாதி என்பது இந்தியாவின் வாதம். சங்பரிவார் என்றில்லாமல், காங்கிரசும் இவ்வாறு தான் ஜின்னாவை அழைத்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜின்னாவை மதவாதி என்ற முத்திரை குத்தியதே காங்கிரஸ் கட்சி தான். உண்மையில் ஜின்னா காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் இயக்கங்கள் கூறுவது போல மதவாதி தானா ?

நிச்சயமாக இல்லை என்று சொல்ல முடியும். அதே நேரத்தில் மதத்தை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

ஜின்னாவை குறித்த அத்வானியின் கருத்துக்கள் தவறானவை அல்ல. ஜின்னா இன்றைய பாக்கிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் தேவைப்படும் மதச்சார்பின்மை குறித்த பல விஷயங்களை 1947லேயே கூறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக, இரண்டு நாடுகளுமே இன்று மதரீதியாகவே பிளவுபட்டு நிற்கிறது. ஜின்னா பாக்கிஸ்தான் கிடைத்த சில வருடங்களில் இறந்து விட்டார். அவருடன் அவர் பாக்கிஸ்தானை உருவாக்கிய நோக்கங்களும் மறைந்து போய் விட்டன. அதன் பிறகு பாக்கிஸ்தானில் உருவாகிய தலைவர்கள் பாக்கிஸ்தானை படிப்படியாக மதரீதியான தேசமாக மாற்றி விட்டனர்.

ஜின்னா பாக்கிஸ்தான் குறித்து 1947ல் பின் வருமாறு கூறினார். இந்த நோக்கங்கள் இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கும் சரி, இந்தியாவிற்கும் சரி மிகுந்த தேவைக்குரியதாக இருக்கிறது.

‘Now, if we want to make this great State of Pakistan happy and prosperous we should wholly and solely concentrate on the wellbeing of the people, and specially of the masses and the poor. If you will work in cooperation, forgetting the past, burying the hatchet, you are bound to succeed. If you change your past and work in a spirit that every one of you, no matter to what community he belongs, no matter what relations he had with you in the past, no matter what is his colour, caste or creed, is first, second and last a citizen of this state with equal rights, privileges and obligations, there will be no end to the progress you will make.

‘I cannot overemphasise it too much. We shall begin to work in that spirit and in course of time all these angularities of the majority and minority communities, the Hindu community and Muslim community,… will vanish. Indeed, if you ask me, this has been the biggest hindrance in the way of India to attain its freedom and independence and but for this we would have been free people long ago.

Therefore, we must learn a lesson from this. You are free, you are free to go to your temples. You are free to go to your mosques or to any other places of worship in this State of Pakistan. You may belong to any religion or caste or creed; that has nothing to do with the business of the State.…You will find that in course of time Hindus will cease to be Hindus and Muslims would cease to be Muslims, not in the religious sense, because that is the personal faith of each individual, but in the political sense as citizens of the State.’

Jinna’s Address to the Constituent Assembly of Pakistan, Karachi
August 11, 1947

ஜின்னாவின் இந்த பேச்சினை பிறகு வந்த பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் பல காலக்கட்டங்களில் அவரின் உரையிலிருந்தே நீக்கி விட்டனர். குறிப்பாக ஹியா-உல்-ஹக் என்ற பிரபலமான இராணுவ ஆட்சியாளர், இந்தப் பேச்சினை “ஜின்னாவின் தொகுக்கப்பட்ட உரைகளில்” இருந்து நீக்கினார். ஜின்னாவின் இந்தப் பேச்சு பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு தான் என்ற நிலையை மாற்றி விடுவதாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஜின்னா தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஒரு முஸ்லிம் என்று என்றைக்கும் முன்னிறுத்த வில்லை. வசதியான குடும்பம், மேற்கத்திய நாகரிகம், மேற்கத்திய வாழ்க்கை முறை போன்றவை மூலம் அவர் ஒரு ஆங்கிலேயர் போலத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜின்னா மத நம்பிக்கை கொண்டவரும் அல்ல. உதாரணமாக கூற வேண்டுமானால் பன்றிக் கறி உண்பது போன்ற இஸ்லாமுக்கு உவ்வாத காரியம் என்று கூறப்படுவதை கூட அவர் செய்து வந்திருக்கிறார். இதனை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன்னை முஸ்லிம் என்று நிலைநிறுத்த என்றைக்கும் முனைந்ததில்லை.

ஆனால் காங்கிரசில் இருக்கும் தலைவர்களுக்கு எதிரான தன்னுடைய ஈகோவை தீர்த்துக் கொள்ள முஸ்லிம் என்ற அடையாளத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படும் வாதங்களில் உண்மை இருக்கவேச் செய்கிறது.

ஜின்னா முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கோரினார். முஸ்லிம்களுக்கு தனி பிரதிநிதித்துவம், முஸ்லீம்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரம் போன்றவையை அவர் முன்னிறுத்தினார். ஒன்றுபட்ட இந்தியாவுடன், முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம் என்பதாகத் தான் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் இருந்து வந்தது. ஆனால் அதனை நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முஸ்லீம் லீக்கை காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும் என்றும் அவர்கள் எண்ணினர். 1937ல் நடந்த தேர்தல் கூட காங்கிரசின் இந்த வாதத்தை வலுப்படுத்தவே செய்தது. முஸ்லீம் லீக் மூஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் அதிக இடங்களை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பிற இடங்களில் ஓரளவுக்கு கணிசமான வெற்றியை மூஸ்லீம் லீக் பெற்றது என்று சொல்லலாம்.

சாதி இந்துக்கள் அதிகம் இருக்கும் காங்கிரசில், முஸ்லீம்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று ஜின்னா நினைத்தார். 1940 முதல் “இரு தேசம்” என்ற கொள்கையை ஜின்னா எடுக்கத் தொடங்கினார். பிரிட்டிஷாரும் இதனை ஊக்குவித்தனர். வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஜின்னாவுக்கு இருந்த நெருங்கிய நட்பு அவரது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

ஆனால் பாக்கிஸ்தானை ரத்த வெள்ளத்திற்கு இடையே தான் ஜின்னாவால் அமைக்க முடிந்தது. 1946ல் பாக்கிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி “Direct Action Day” என்று ஜின்னா அறிவித்தது கல்கத்தாவில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. இந்து முஸ்லீம் கலவரமாக மாறி அந்த நாளில் பல ஆயிரக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும் பலியானார்கள். 10,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று அரசின் புள்ளி விபரங்கள் கூறுகிறது. (“ஹே ராம்” திரைப்படத்தில் கூட கமல் இதனை தன்னுடைய கதையில் கொண்டு வந்திருப்பார்) இந்துக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பத்தில் இருந்த ஜின்னா பின் இந்துக்களுடன் ஒரே இந்தியாவில் இருக்க முடியாது என்ற முடிவிற்கு வர காங்கிரஸ் தலைவர்களுடன் மூஸ்லிம்களுக்கு பிரநிதித்துவம் போன்றவற்றில் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் முக்கிய காரணமாக தெரிகிறது.

அதே சமயத்தில் பாக்கிஸ்தான் என்ற தேசம் 1947ல் உருவாகாமல் இருந்திருந்தால் அதன் பிறகு அப்படி ஒரு தேசம் நிச்சயமாக உருவாகி இருக்காது என்றும் கூறிவிட முடியாது. பாக்கிஸ்தானில் ஜின்னாவிற்கு பின் தோன்றிய முஸ்லீம் வெறியர்களும், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சங்பரிவார் குழுக்களும் நிச்சயம் பல தேசங்களை உருவாக்கியிருக்க கூடும். பாக்கிஸ்தான் பின் இரண்டாக உடைந்து பங்களாதேஷ் உருவாகியதும் கவனிக்கத்தக்கது. 1947ல் ஏற்பட்ட பிரிவினையால் மூன்று தேசங்கள் மட்டுமே உருவாகியது.

இந்தியா இன்னும் “ஒரு” தேசமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் நேரு தான் என்பது என்னுடைய எண்ணம். சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியாவின் பிரதமராகக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தால் இந்தியாவை பாக்கிஸ்தான் போன்ற ஒரு முழுமையான மதம் சார்ந்த நாடாக மாற்றி இருப்பார்கள். நேரு இந்தியாவை அவ்வாறு மாற்ற விடாமல் தடுத்தார் என்றே நான் நினைக்கிறேன். நேருவின் பொருளாதாரம், வெளியுறவு, காஷ்மீர் உள்ளிட்ட பிற கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்றைய ஒரு சராசரி இந்தியனை நேரு “அன்றைக்கே” வெளிப்படுத்தியதாகவே நான் நினைக்கிறேன் (இதற்கான காரணங்களை நேரு குறித்து பதிவுகள் எழுதும் பொழுது முன்வைக்க முடியும் என்று நினைக்கிறேன்)

மேதா பட்கர், இயற்கை

April 6, 2006 at 9:37 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 5 Comments

மேதா பட்கர், நர்மதா அணைக்கட்டு திட்டத்தை எதிர்த்து இருந்த உண்ணாவிரதம் அவரது கைது மூலம் முடிவிற்கு வந்திருக்கிறது. உண்ணாவிரதத்தின் 8வது நாளில் காவல்துறையினர் அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர்.

சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் வித்தியாசமான போராட்டம். தங்களுடைய வாழ்க்கை தேவைகளுக்கான போராட்டமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை முறைக்கான போராட்டமாகவும் இது உள்ளது. நர்மதா நதியின் மீது 30பெரிய அணைகள், 135சிறிய அணைகள் மற்றும் 3000குட்டி நீர் தடுப்பு நிலைகளை உருவாக்கும் திட்டத்திற்கு எதிராகத் தான் இந்த போராட்டம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பல கிராமங்கள் நீரில் முழ்கும் நிலையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்மாறக் கூடிய சூழ்நிலையும் எழுந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தேவைகள் தவிர இங்கிருக்கும் பல பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும் இந்த திட்டம் அடியோடு மாற்றி விடும் என்று நர்மதா அணை எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்த திட்டம் மூலம் மின்சாரம், குடிநீர் பல ஊர்களுக்கு வழங்க முடியும் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்றும் அரசு வாதிடுகிறது. ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்ட பொழுது இங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த ஒரு சரியான திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. இன்று மேதா பட்கர், அருந்ததி ராய் போன்றவர்கள் இந்தப் பிரச்சனையை மிகப் பெரிய போராட்டமாக மாற்றியப் பிறகு மேதா பட்கர் இந்தியா முழுவதும் பிரபலமாகி இந்தப் பிரச்சனையையும் பிரபலமாக்கியதால் அரசு சரியான நிவாரணம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்தப் பிரச்சனை நீதி மன்றத்திற்கு சென்று இன்று அரசு சரியான நிவாரண திட்டங்களை வைத்திருப்பதாகவும் நீதி மன்றம் கூறியிருக்கிறது.

இங்கு அரசு கூறிக் கொண்டிருப்பதெல்லாம் நிவாரணங்களே. ஆனால் பிரச்சனை மக்களின் இடமாற்றம், சுற்றுப்புறச்சூழல், வாழ்க்கை முறை போன்றவை தான். அதனை அரசாங்கத்தின் எந்த நிவாரணங்களும் ஈடுசெய்து விட முடியாது.

வளர்ச்சி, பொருளாதார தேவைகள் இவற்றுக்கிடையே இம் மக்களின் பிரச்சனைகள் அர்த்தமற்றவையாக பலருக்கு தோன்றவே செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பு கூட இந்தப் பிரச்சனையின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், இழப்பீடு, நிவாரணம் என்ற ரீதியில் தான் இருந்தது.

இவ்வாறு பெரிய அணைகள் அங்கிருக்கும் காடுகளையும், கிராமங்களையும், இயற்கையான அத்தனை அம்சங்களையும் அழிக்கிறது. நீர்நிலைகள் தடம்மாறும் பொழுது பூமியின் நிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவெல்லாம் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகத்தையேச் செய்யும்.

வளர்ச்சி எத்தனையோ மோசமான மாற்றங்களை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையே அதற்கு மிகச் சரியான உதாரணம். கூவம் நதியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் வரை நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் பலவிதமான நாரைகளும், பறவைகளும் வருவது வழக்கம். ஆனால் இன்று குப்பை கொட்டும் இடமாக பள்ளிக்கரணை மாறிவிட்டது. சென்னை முழுவதும் பல நீர்நிலைகள் ஒரு காலத்தில் இருந்தன. ஆனால் இன்று தண்ணீருக்கு திண்டாடும் நிலைக்கு நாம் மாறிவிட்டோம்.

இன்றைய யதார்த்த வாழ்க்கையில் இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை மிகக் கடினமான ஒன்று தான். அணைக்கட்டுகளில் தொடங்கி, நாட்டின் பல வளர்ச்சிப் பணிகளில் பாதிக்கப்படுவது வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்கள் தான். நர்மதா அணைக்கட்டு திட்டப்பகுதியின் நதியோரங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் தான். அதனாலேயே அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சனை மீது பெரிய அக்கறை ஏற்படுவதில்லை.

வளர்ச்சி, பொருளாதாரம் என்று வாதிடும் நாம் தான் முதுமலை போன்ற காட்டு பகுதிகளுக்கு செல்லும் பொழுது நம்மையே மறந்து விடுகிறோம். அந்தக் காடுகளில் மரம் வெட்டுபவர்களை நினைத்து நாம் ஆவேசம் கொள்கிறோம். இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அந்தக் காட்டுப் பகுதியில் ஏற்படுகிறது. கரை புரண்டோடும் நீர் நிலைகளை மழைக்காலங்களில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு மிகுந்த பரவச நிலையை நமக்கு ஏற்படுத்துகிறது.

ஆனால் நகரத்திற்கு வந்தவுடன் அதுவெல்லாம் மறந்து போய் விடுகிறது. இயற்கையின் எழில் கொஞ்சும் பகுதிகள் சில நாட்கள் ரசிப்பதற்கு மட்டுமாகவே நமக்கு தெரிகிறது. வளர்ச்சி தேவைகளுக்கு முன்பாக நர்மதா அணைக்கட்டு போன்ற பிரச்சனைகள் அர்த்தமற்றவையாக நமக்கு மாறி விடுகிறது. இயற்கை மீது பெரிய அளவில் அக்கறை நமக்கு vacation எடுக்கும் பொழுது தான் வருகிறது. பிறகு அதன் மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை.

இந்த அணைக்கட்டு திட்டமும் நிற்கப் போவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட பல இயற்கையான வாழ்விடங்களில் இந்தப் பகுதியும் ஒன்றாக மாறப் போகிறது.

தொகுதி அலசல் : பண்ருட்டி

April 6, 2006 at 6:59 pm | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

பண்ருட்டி தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் குறித்த எனது அலசல்

தொகுதி அலசல் : பண்ருட்டி

April 6, 2006 at 12:03 am | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

வடமாவட்டங்களில் பாமகவின் பலத்தை சரியாக கணிக்க முடியாத தொகுதிகளில் பண்ருட்டி முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிராமங்கள் (பண்ருட்டி நகரத்தை தவிர்த்து) மட்டுமே கொண்ட தொகுதி என்பதால் இங்கு சாதி வாரியாக பார்த்தால் வன்னியர்களே அதிகம். அடுத்த நிலையில் இருப்பவர்கள் தலித் மக்கள். 1991, 2001 தேர்தல்களில் பாமக வென்றிருக்கிறது. 1996 தேர்தலில் திமுக வென்றது. 1991 தேர்தலில் பாமகவை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி பண்ருட்டி தான் என்றவகையில் பாமகவிற்கு இந்த தொகுதி மேல் தனி கவர்ச்சி உண்டு. ஆனால் அதே அளவுக்கு பாமகவிற்கு பலம் உள்ளதா என்பது கேள்விக்குறி தான்.

1991 தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் 39,911 ஓட்டுக்கள் பெற்று, 1,122 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு போராடி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கடுமையான ராஜீவ் அனுதாப அலை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பண்ருட்டியாரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்று அப்பொழுது கூறப்பட்டது. இதற்கு பிறகு பண்ருட்டியார் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். தனிக்கட்சி தொடங்கினார்.

1996 தேர்தலில் இங்கு திமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 68,021 ஓட்டுக்களைப் பெற்றது. அதிமுக 28,891 ஓட்டுக்களைப் பெற்றது. பாமக 9,988 ஓட்டுக்களை மட்டுமே பெற்றது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த தேர்தலில் ஜெ எதிர்ப்பு அலை இருந்தது.

1996 தேர்தலில் இங்கு பண்ருட்டியார் போட்டியிடவில்லை. பண்ருட்டியார் தனக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று நிச்சயமாக தெரிந்தால் மட்டுமே போட்டியிடுவார் என்ற கருத்து இங்கு பரவலாக உண்டு. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கும் பொழுது மட்டுமே அவர் இங்கு போட்டியிடுவார். 1996 தேர்தலில் பண்ருட்டியார் இங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவரான நந்தகோபால் கிருஷ்ணன் நிற்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து போட்டியிடாமல் தான் வெற்றி பெற முடியாது என்று பண்ருட்டியார் முடிவு செய்திருக்க கூடும்.

ஆனால் 2001 தேர்தலில் பண்ருட்டியார் திடீரென்று சுயேட்சையாக கடைசி நேரத்தில் களமிறங்கினார். இதற்கு காரணம் இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்கிய பாமக-அதிமுக கூட்டணி வேட்பாளாரான பாமகவின் தி.வேல்முருகன், இந்த தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாதவர். புதியவர். இளைஞர். எனவே தான் இங்கு வெற்றி பெற்று விடலாம் என்று பண்ருட்டியார் எண்ணினார். வேல்முருகன் பண்ருட்டியரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர். பண்ருட்டியாரின் உறவினரும் கூட. இவர் பாமகவில் நிற்பது அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பண்ருட்டியாரை தான் சந்தித்து “ஆசி” பெற்றார் என்று அப்பொழுது இங்கு கூறப்பட்டது. அந்த சமயத்தில் இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாம் வேல்முருகனுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் மூந்தைய தலைமுறையினர் பண்ருட்டியாருக்கும் வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் இங்கு பரவலாக இருந்தது. அதன் படியே தான் நடந்தது என்றும் சொல்லலாம். பண்ருட்டியார் 30,459 ஓட்டுக்களை தனியாக இருந்து பெற்றார். ஆனால் மூன்றாம் இடத்தையே பிடித்தார். வேல்முருகன் 45,963 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 40,915 ஓட்டுக்களைப் பெற்றது.

கடந்த கால வாக்கு நிலவரத்தை கொண்டு பார்த்தால் இங்கு பலமாக இருக்கும் கட்சிகளில் முதலிடம் திமுகவிற்கு தான். அடுத்த இடம் அதிமுகவிற்கு. மூன்றாம் இடத்தில் தான் பாமக வருகிறது. ஆனால் பாமகவிற்கு இங்கு அதிகம் செல்வாக்கு இருப்பது போல தெரிவதற்கு காரணம், இங்கு முழுக்க முழுக்க இருக்கும் வன்னியர்களின் வாக்குகள் தான். திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளிலும் தான் வன்னியர்கள் அதிகம் இருப்பார்கள். அதனாலேயே திமுக-பாமக கூட்டணி அமைக்கும் பொழுது இங்கு இந்தக் கூட்டணிக்கு பலம் அதிகம் இருக்கும்.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் கூட இந்த தொகுதியில் திமுக பண்ருட்டியில் சுமார் 72,580 வாக்குகளைப் பெற்றது. அதிமுக 46,420 வாக்குகளும், விடுதலைச் சிறுத்தைகள் 9,730 வாக்குகளையும் பெற்று இருக்கின்றனர். அதிமுக-விடுதலைச் சிறுத்தைகளின் மொத்த வாக்குகள் 56,150 வாக்குகள். மதிமுகவிற்கு சுமாராக 3,000 வாக்குகள் இங்கு இருக்கலாம்.

ஆக, 2004 பாரளுமன்ற தேர்தல் நிலவரம் படி சுமார் 13,000 வக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி இங்கு முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் விஜயகாந்த் கட்சியின் மூலம் இங்கு பண்ருட்டியார் மறுபடியும் களமிறங்குகிறார். மும்முனை போட்டி இருக்கும் வடமாவட்டத்தின் வெகுசில தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதுவும் வி.ஐ.பி. தொகுதி. பாமகவிற்கு முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டியாரை அனுப்பி வைத்த பண்ருட்டி, விஜயகாந்திற்கு இங்கிருந்து முதல் உறுப்பினரை அனுப்பி வைக்குமா ?

அனுப்பாது என்பது தான் என்னுடைய கருத்து.

காரணம்

  • பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் + திமுக கூட்டணி
  • அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் + அதிமுக கூட்டணி
  • சரிந்து போய் விட்ட பண்ருட்டியாரின் செல்வாக்கு

பல தொகுதிகள் போல இல்லாமல், இந்த தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சியின் வேட்பாளர்களுமே தொகுதியில் பிரபலமான பெரும் புள்ளிகள்.

2001 தேர்தலில் வேல்முருகன் களமிறங்கிய பொழுது அவர் தொகுதிக்கு புதிய முகம். அப்பொழுது இவருக்கு சுமார் 27வயது என்று நினைக்கிறேன். இவர் சரியான கத்துக்குட்டி என்று எண்ணி தான் பண்ருட்டியார் களமிறங்கினார். ஆனால் அதே வேல்முருகன் இன்று தொகுதியில் மிக பிரபலம். தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் இந்தப் பகுதியின் பிரபலமான பிரமுகர் ஆகியிருக்கிறார். தொகுதியில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கினை கணிசமாக வளர்த்து இருக்கிறார். இந்தப் பகுதியில் நடக்கும் பல திருமண விழாக்களில் இவரை பார்க்க முடியும். பண்ருட்டியார் போல சென்னையில் இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதி பக்கம் வருபவர் என்ற இமேஜ் இவருக்கு இல்லை. தொகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர். அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனின் “பழைய ரொளடி” போன்ற எந்த தவறான இமேஜும் இவருக்கு இல்லை. கட்சிகளைக் கடந்த செல்வாக்கினை வேல்முருகன் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

இவருடைய பலவீனம், இவருடைய அதிரடி அரசியல் தான். இந்தப் பகுதியில் இருக்க கூடிய பல சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. குறிப்பாக ரஜினி மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. பாபா படம் திரையிடப்பட்ட பொழுது பண்ருட்டியில் தான் முதன் முதலில் தியேட்டர் திரை கிழிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது இவருடைய மேற்பார்வையில் தான் நடந்தது. அது போல பல ரசிகர் மன்றங்களையும் இவர் கலைக்க வைத்தார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். இவருடைய வயது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதிமுகவின் சொரத்தூர் ராஜேந்திரன் இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். முதலில் தாதா என்ற வகையில் அறிமுகமானவர். ஆரம்பம் முதலே ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி, பண்ருட்டி தொகுதி, கடலூர் பாரளுமன்ற தொகுதி என பல தொகுதிகளில் இவர் போட்டியிட்டு இருந்தாலும் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் பலமான வேட்பாளர் தான் என்றாலும் இவருடைய கடந்த காலம் பலருக்கும் ஞாபகமிருக்கிறது. பணபலம், தொகுதியில் இருக்கும் அறிமுகம், அதிமுக பலம் போன்றவை மூலம் இம்முறை எப்படியாவது மும்முனை போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

பண்ருட்டியார் – இந்தப் பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. 1977, 1980, 1984, 1991 என நான்கு முறை இந்த தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றிருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல பண்ருட்டியில் பேருந்துகளை பல ஊர்களுக்கு இயக்கியே பிரபலம் ஆனவர். ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே தொகுதிக்கு வருவது இவருடைய பலவீனம். இவர் மேல் அபிமானம் கொண்ட பழைய வாக்காளர்கள் தான் இவருடைய செல்வாக்கிற்கு முக்கிய காரணம். இப்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. அந்த பழைய வாக்காளர்களும் இம் முறை இவருக்கு இம்முறை வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. பண்ருட்டியாரின் செல்வாக்கு சரிந்து கொண்டே தான் வந்துள்ளது. விஜயகாந்த் மூலமாக இளைஞர்கள் செல்வாக்கு கிடைக்கும். ஆனால் வேல்முருகனின் செல்வாக்கிற்கு முன்பாக ஈடுகொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

இனி எனது கணிப்பு…

மூன்று பிரபலமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தொகுதியில் கடுமையான போட்டியிருக்கிறது.

2004 பாரளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை பண்ருட்டியார் பிரிப்பார். பண்ருட்டியார் இரு வேட்பாளர்களிடம் இருந்துமே வாக்குகளைப் பிரிப்பார். இவருடைய அனுதாபிகள் அதிமுகவில் அதிகளவில் உள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இங்கு திமுக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து வந்துள்ளது. திமுகவில் இருக்கும் ஓட்டுக்கள் பெரும்பாலும் இந்தப் பகுதியில் “பண்ருட்டியார் எதிர்ப்பு வாக்குகள்” தான். பல காலமாக தொடர்ந்து திமுகவிற்கு விழுந்து கொண்டிருக்கும் வாக்குகள். திமுக இங்கு தன்னுடைய வாக்குகளாக சுமார் 40,000 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பாமக இம்முறை திமுக கூட்டணியில் இருப்பதால் இது பாமகவிற்கு சாதகமாக உள்ளது.

விஜயகாந்த் மூலம் திமுக-பாமக ஓட்டுகள் பண்ருட்டியாருக்கு வந்து சேரும் என்று கணித்தாலும், அதிமுகவில் இருந்து தான் அதிகளவில் இவருக்கு வாக்குகள் வந்து சேரும். ஏனெனில் இங்கு அதிமுக வளர பண்ருட்டியார் முக்கிய காரணம்.

திமுக, அதிமுக என இரு கட்சிகளிடம் இருந்துமே பண்ருட்டியார் ஓட்டுக்களைப் பிரிப்பதால், மும்முனை போட்டியில் திமுக கூட்டணிக்கே சாதகம் அதிகம்.

கடந்த தேர்தலில் பெற்ற 30,000 வாக்குகளை விட இம்முறை குறைவாகவே பண்ருட்டியார் பெறக்கூடும் என்பது எனது கணிப்பு.

பாமகவிற்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகளவில் இல்லை. என்றாலும் திமுகவுடனான கூட்டணி பலம், வேல்முருகனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக பண்ருட்டியில் பலாப்பழ, முந்திரி சீசனில், வழக்கமான பலாப் பழ வாசனையுடன் மாம்பழ வாசனையும் வீசிக் கொண்டிருக்கிறது.

பண்ருட்டி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு

குழலியின் பண்ருட்டி தொகுதி அலசல்

Next Page »

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.